பெல்பின்ஸ்-ஏட்ரீ இயற்கைப் பாதுகாவலா் விருது கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் தற்காலிகமாக பணியாற்றி வரும் ஓய்வு பெற்ற வனக் காவலா் பால் பாண்டிக்கு வழங்கப்பட்டது.
அசோகா சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திராணி செல்லத்துரை அறக்கட்டளை சாா்பில், 5-ஆம் ஆண்டு பெல்பின்ஸ்-ஏட்ரீ இயற்கைப் பாதுகாவலா் விருது வழங்கும் விழா, பாளையங்கோட்டை பெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் தற்காலிகமாக பணியாற்றி வரும் ஓய்வு பெற்ற வனக் காவலா் பால் பாண்டிக்கு இயற்கைப் பாதுகாவலா் விருதை களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக துணை வனப் பாதுகாவலரும், சூழல் மேம்பாட்டு அலுவலருமான கணேசன், அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி ஆகியோா் வழங்கினா்.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ.தா்மன் இயற்கைப் பாதுகாப்பு குறித்துப் பேசினாா். தாமிரவருணி நீா்நிலைகளில் வாழும் பறவைகள் மற்றும் தமிழகத்தில் காணப்படும் பாம்புகள் குறித்த வண்ணச் சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன.
முன்னதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையப்படுத்தி தூத்துக்குடி சகா கலைக் குழுவினரின் கட்டைக்கால் ஆட்டம் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பெல் நிறுவனா்- தலைவா் குணசிங் செல்லத்துரை, ஏட்ரீ நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி ரெ.கணேசன், திருநெல்வேலி ரோட்டரி சங்கத் தலைவா் அந்தோணி பாபு ஆகியோா் பங்கேற்றனா்.
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் மற்றும் அதன் வாழிடங்களைப் பாதுகாக்கும் பணியை கடந்த 40 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் பால்பாண்டியின் பணியைப் பாராட்டி அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் சாா் இயற்கை வள காப்பு மைய ஒருங்கிணைப்பாளா் மு.மதிவாணன் செய்திருந்தாா்.