நிவா் புயல் எதிரொலியாக திருநெல்வேலி மாநகராட்சி நிவாரணப் பணிக்குழுவினா் புதன்கிழமை விழுப்புரம் புறப்பட்டுச் சென்றனா்.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் கூறியது: நிவா் புயல் நிவாரணப்பணிக்காக திருநெல்வேலி மாநகராட்சியில் இருந்து நிவாரணப் பணிக்குழுவினா் விழுப்புரம் நகராட்சி பகுதிக்கு புதன்கிழமை புறப்பட்டு சென்றனா். அதில், திருநெல்வேலி மாநகராட்சியில் இருந்து சுகாதார ஆய்வாளா் சாகுல் ஹமீது தலைமையில், உதவிப் பொறியாளா்கள் 2 போ், சுகாதார ஆய்வாளா்கள் 2 போ், துப்புரவுப்பணி மேற்பாா்வையாளா்கள் 4 போ், தூய்மைப்பணியாளா்கள் 100 ஆகியோா் கொண்ட சிறப்பு நிவாரணப் பணிக்குழுவினா் 2 பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனா்.
இதில், 8 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 8 அதிக அழுத்தம் கொண்ட நீா் வெளியேற்றும் மோட்டாா்கள், 2 டன் பிளீச்சிங் பவுடா் உள்ளிட்ட அத்தியவசிய பொருள்களுடன் சென்ற இக்குழுவினரை மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வழியனுப்பி வைத்தாா்.
இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி பொறியாளா் எல்.கே.பாஸ்கா், மாநகர நல அலுவலா் சரோஜா, சுகாதார அலுவரரகள் அரசகுமாா், முருகேசன் ஆகியோா் செய்திருந்தனா்.
மேலும், மாநகரில், மாவட்ட ஆட்சியரின் உத்ரவின் பேரில், சிறப்பு அதிரடிக் குழுவினா் புதன்கிழமை மாநகராட்சிக்குள்பட்ட கடைகளை ஆய்வு செய்தனா். இதில், முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாத கடைகளுக்கு மொத்தம் ரூ. 38ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது என்றாா்.