திருநெல்வேலி மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ. 25.73 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணியும், ரூ.78.51 கோடி மதிப்பீட்டில் சந்திப்பு பெரியாா் பேருந்து நிலையம் கட்டுமான பணியும், ரூ.13.20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்தில் பணிகளும், ரூ.13.08 கோடி மதிப்பீட்டில் பாளையங்கோட்டை பேருந்து நிலைய பணிகள் நடைபெறுகின்றன.
இப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொலிவுறு நகர திட்ட மேலாண்மை இயக்குநா் மற்றும் மாநகராட்சி ஆணையா் ஜி. கண்ணன் தலைமை வகித்தாா். முதன்மை அலுவலா் நாராயணநாயா் முன்னிலை வகித்தாா்.
பேருந்து நிலையத்தில் கட்டுமான அலுவலகங்களை வாடகை மற்றும் குத்தகைக்கு வழங்குவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் கட்டப்படும் கழிப்பிடங்களை நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் பராமரித்திடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், பணிகள் மேற்கொள்ளப்படும் போது பொதுமக்களுக்கு முன்அறிவிப்பு வழங்கி தேவைப்படின், போக்குவரத்தை மாற்றி அமைக்க காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் அப்பகுதிகளைச் சோ்ந்த நலச்சங்க பிரதிநிதிகள், உதவி ஆணையா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.