மேலப்பாளையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தராத திருநெல்வேலி மாநகராட்சியைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி தலைவர் கே.எம்.எஸ்.எம்.புகாரி சேட் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சி மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் ஹயாத் முகம்மது தொடங்கி வைத்தார். மாநகர்மாவட்ட செயற்குழு உறுப்பினர் மின்னதுல்லாஹ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். பாய், தலையணை, உணவு சமைக்கும் பாத்திரங்களுடன் போராட்டம் நடைபெற்றது.
போராட்டக் குழுவினர் கூறுகையில், மேலப்பாளையம் 29 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான கரீம் நகர் ,தய்யூப்நகர் ,காயிதே மில்லத் நகர், ஆசிரியர் காலனி, பாத்திமாநகர் பகுதிகளில் சாலை இல்லை. கழிவுநீர் செல்ல வழியில்லை, மழைநீர் செல்ல வாறுகால் இல்லை, மின்கம்பம் இருந்தும் மின் விளக்கு இல்லை, அதிகாரிகள் வெற்றுக் காரணங்கள் கூறி மக்களின் அடிப்படை வசதிகளை மறுக்கிறார்கள்.
மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளோம். இதனை தொடர்ந்து சரி செய்யாத பட்சத்தில் அடுத்த கட்டமாக ஆயிரம் குடும்பங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறுவோம் என்றனர்.