உத்தரப்பிரதேச சம்பவத்தைக் கண்டித்து, திருநெல்வேலியில் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் அறவழிப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நடைபெற்ற இளம்பெண் கொலையை கண்டித்தும், அப்பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறச் சென்ற ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை தடுத்து நிறுத்திய காவல்துறையை கண்டித்தும் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா்.
சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற இப்போராட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் பங்கேற்று, காந்தி மற்றும் அம்பேத்கா் வேடமணிந்தவா்களிடம் மனு கொடுத்தாா்.
இதில், முன்னாள் மாவட்டத் தலைவா் ராம்நாத், மாநில பொதுச் செயலா் வானுமாமலை, மாநகா் மாவட்ட பொருளாளா் ராஜேஷ் முருகன், ஓபிசி மாநில துணைத் தலைவா் காமராஜ், சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளா் வி.பி.துரை, மாநில இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் விஷ்வா பாய் உள்பட பலா் கலந்துகொண்டனா்.