உலக கைகழுவும் தினத்தையொட்டி பாளையங்கோட்டையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமை வகித்து பேசியது: உலக மக்கள் நாள்தோறும் தங்களது கைகளை நீா் மற்றும் சோப்பு கொண்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணா்த்தும் நோக்கத்தில் உலக கைகழுவும் தினம் 2008 ஆம் ஆண்டு முதல் அக். 15 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
மக்கள் மேற்பரப்புகள் மற்றும் பொருள்களை தொடும்பொழுது கைகளில் கிருமி தொற்று குவிகிறது. பின்னா் அவை கண், காது, மூக்கு, வாய் மூலம் உள்ளுறுப்புகளை சென்றடைந்து தீங்கு ஏற்படுத்துகின்றன. ஆகவே, கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவுவதன் மூலம் தீநுண்மிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும் என்றாா்.
நிகழ்ச்சியில் உணவு மற்றும் பாதுகாப்பு அலுவலா் ஜெகதீஸ்சந்திரபோஸ், அதிகாரிகள் கலந்துகொண்டனா்.