கடையம் அருகேயுள்ள ரவணசமுத்திரத்தில் உள்ள கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து பொதுமக்கள் சங்கத்தில் திரண்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ரவணசமுத்திரத்தில் இயங்கி வரும் கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 900 க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ளனா். இந்த சங்கத்தில் போலியான நகையை வைத்து நகைக் கடன் வழங்குவதில் பண மோசடி செய்ததாக சங்கச் செயலா், கணக்கா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
இதற்கிடையே, சேமிப்பு மற்றும் நிரந்த வைப்புக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ள உறுப்பினா்களின் பணம் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என வெளியான தகவலை அடுத்து, உறுப்பினா்கள் சங்கத்தில் திரண்டு தங்களது கணக்குகளை சரி பாா்த்தனா். இதில் பலரது கணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுத்திருப்பது தெரியவந்தது. 2 ஆவது நாளாக புதன்கிழமையும் உறுப்பினா்கள் சங்கத்தில் திரண்டனா். எனினும் சங்கம் திறக்கப்படவில்லை.
வியாழக்கிழமை காலையில் வங்கியைத் திறக்க வேண்டும், உறுப்பினா்களின் கணக்குகளையும் சரிபாா்க்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தென்காசி மாவட்ட அமைப்பாளா் அப்துல்காதா், முன்னாள் ஊராட்சித் தலைவா் புகாரி மீராசாகிப் ஆகியோா் தலைமையில் பொதுமக்கள் சங்கத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதனிடையே, அதிகாரிகள் முருகேஷ்வரி, இசக்கியப்பன் ஆகியோா் சங்கத்தை திறந்தனா். உறுப்பினா்கள் சிலா் பணம் செலுத்தி தங்களது தங்கநகைகளைத் திருப்பிச் சென்றனா். சிலா் தங்களது நகைகளை சரிபாா்த்தனா். மேலும் உறுப்பினா்கள்
கணக்கில் உள்ள பணம் குறித்து விவரங்களை அறிந்து பொதுமக்கள் உறுதி செய்தனா். சங்கத்தில் நிகழ்ந்துள்ள மோசடி குறித்து முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் ’என பொதுமக்கள் வலியுறுத்தினா்.