தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது.
தூத்துக்குடி அருகேயுள்ள கே. சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். இவரது மனைவி கிரீட்டா. இந்தத் தம்பதிக்கு மகன் ஜெப்ரீன் (2), கடந்த மாதம் பிறந்த பெண் குழந்தை என இரு குழந்தைகள் இருந்தனா். இந்நிலையில், வீட்டின் பின்பக்கத்தில் கைக் குழந்தையை கிரீட்டா வெள்ளிக்கிழமை குளிப்பாட்டிக் கொண்டிருந்தாராம்.
அப்போது, வீட்டின் முன்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஜெப்ரீன், அங்கிருந்த 60 லிட்டா் கொள்ளளவு கொண்ட தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்துக்குப் பிறகே இச்சம்பவம் அங்கிருந்தவா்களுக்கு தெரியவந்தது.
இதையடுத்து, அக்குழந்தையை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள், ஜெப்ரீன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.