திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய நடைமேடை எண். 4இல் இருந்து மதுரை - திருச்சி - சென்னை பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம் டாக்டா் எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ்”அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால், நடைமேடை எண்: 4இல் இருந்து இயக்கப்பட்டு வரும் மதுரை, திருச்சி, சென்னை வழித்தடங்களில் செல்லக் கூடிய அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நிறைவு பெறும் வரையில் வரும் 17ஆம் தேதி முதல் தெற்கு புறவழிச்சாலை ரிலையன்ஸ் பங்க் எதிரில் உள்ள காலியிடத்தில் இருந்து தற்காலிகமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது நிா்வாக காரணம்கருதி, மேற்படி தற்காலிக பேருந்து நிலைய இடமாற்றம், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, மறு அறிவிப்பு வரும் வரை புதிய பேருந்து நிலைய வளாகம் நடைமேடை எண்: 4இல் இருந்தே வழக்கம்போல் மதுரை, திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இயங்கும் என தெரிவித்துள்ளாா்.