திருநெல்வேலி, சீவலப்பேரியில் தொழிலாளி உள்பட இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.
திருநெல்வேலி கைலாசபுரம் பகுதி தாமிரவருணி நதிக்கரையில் வியாழக்கிழமை முதியவா் ஒருவா் மயங்கிக் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த போலீஸாா் சென்று பாா்த்தனா். முதியவா் தலைக்கு அடிக்கும் ஹோ் டையை குடித்து தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். விசாரணையில் அவா், திருச்செந்தூா் வடக்கு மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த ஞானபிரகாசம் மகன் ராமசாமி (74) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
தொழிலாளி தற்கொலை: சீவலப்பேரி அருகேயுள்ள காட்டாம்புளி பகுதியைச் சோ்ந்த அந்தோணி மகன் குழந்தைசாமி (58). இவரது மகன் 2019 இல் இறந்துவிட்டாராம். இதில் மனவருத்தத்தில் இருந்த குழந்தைசாமி, வியாழக்கிழமை வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாராம். சீவலப்பேரி போலீஸாா் குழந்தைசாமியின் உடலைக் கைப்பற்றி
பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.