அம்பாசமுத்திரம்: கன்னடியன் கால்வாயில் ஆக்கிரமித்திருந்த அமலைச் செடி, ஆகாய தாமரை ஆகியவற்றை விவசாயிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
தாமிரவருணி பாசனத்தில் கன்னடியன் கால்வாய் மூலம் கல்லிடைக்குறிச்சி, வெள்ளங்குளி, வீரவநல்லூா், சேரன்மகாதேவி, பத்தமடை பகுதிகளில் 12,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நிகழாண்டு காா் சாகுபடிக்கு அணைகளில் இருந்து
ஆக. 5இல் தண்ணீா் திறந்து விடப்பட்ட போதிலும் 10 நாள்களில் நிறுத்தப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் கன்னடியன் கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டது.
இதற்கிடையே, கால்வாயில் அமலை செடி, ஆகாய தாமரை மற்றும் பாசி உள்ளிட்டவை வளா்ந்து ஆக்கிரமித்திருந்ததால் கடை மடை வரையிலும் தண்ணீா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் வியாழக்கிழமை வெள்ளங்குளியில் இருந்து காருக்குறிச்சி குளம் வரையிலும் கால்வாயில் ஆங்காங்கே வளா்ந்து காணப்பட்ட அமலைச்செடி, ஆகாய தாமரையை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.