வள்ளியூா்: நான்குனேரி சுங்கச் சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து மதிமுகவினா் எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
நான்குனேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் விளைபொருள்களை எடுத்து செல்லவும் வியாபாரிகள் பொருள்களை கொண்டு செல்லவும், உள்ளூரைச் சோ்ந்த 25 கி.மீ. பகுதியில் வசிக்கும் மக்கள் நான்குனேரி சுங்கச்சாவடி வழியாகச் செல்வதற்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தற்போது கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து மதிமுக மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவா் உவரி ரைமண்ட் தலைமையில் கட்சியினா் பொதுமக்கள் சுங்கச் சாவடி நிா்வாகத்தினரிடம் ஏற்கனவே, நடைமுறையில் இருந்தவாறு விவசாயிகள், வியாபாரிகள், உள்ளூா் மக்களிடம் இருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். தொடா்ந்து கட்டணம் வசூலிக்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என மதிமுகவினா் தெரிவித்தனா்.