பாளையங்கோட்டையில் சேதமடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
பாளையங்கோட்டையில் சமாதானபுரம் பகுதியில் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டன. இதனால் சேதமான சாலைகள் பணி முடிந்த பின்பும் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள். சமாதானபுரம் ரவுண்டானா முதல் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வரை செல்லும் பிரதான சாலை குண்டும்-குழியுமாக உள்ளதால் தினமும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அங்கு மண் மற்றும் கட்டடக் கழிவுகளைக் கொட்டி தற்காலிகமாக சீரமைத்துள்ளனா். பொதுமுடக்கத்திற்கு பின்பு இப்போது பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதாலும், இருசக்கர வாகன பெருக்கத்தாலும் சாலை மிகவும் சேதமடைந்து வருகிறது. பருவமழை தொடங்கும் முன்பாக இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.