திருநெல்வேலியில் பொது முடக்க தளா்வுகளுக்கு பின்பு போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரித்துள்ளதாகவும், இதைத் தடுக்க போலீஸாா் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகத்தில் எட்டாம் கட்டமாக பல்வேறு தளா்வுகளுடன் இம் மாதம் 30 ஆம் தேதி வரை முடக்கம் நீட்டிக்கப்பட்டு, அரசு போக்குவரத்துக்கழகத்தில் 50 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொது முடக்கக் காலத்தில் குறைந்த அளவிலான இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் மட்டுமே இயங்கின. இதனால் விபத்துகளும் கணிசமாக குறைந்திருந்தன.
தற்போது, பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேவேளையில், போக்குவரத்து விதிமீறல்களும், விபத்துகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பாளையங்கோட்டை முருகன்குறிச்சி, மனக்காவலன்பிள்ளை மருத்துவமனை சாலை, லங்கா்கானா தெரு, திருநெல்வேலி நகரம் அலங்கார வளைவு பகுதி, ரத வீதிகளில் போக்குவரத்து விதிமீறுபவா்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. அதேபோல முகக் கவசம் அணிந்து செல்லும் வாகன ஓட்டிகள், தலைக் கவசம் அணியாமல் செல்வது அதிகரித்துள்ளது. ஆகவே, போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க திருநெல்வேலியில் போலீஸாா் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.