திருநெல்வேலி: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் பெற முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றாா் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள இருபாலா், முதியோா், விதவைகள், பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டங்கள் வழியாக சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, தமிழக முதலமைச்சா் விரிவான காப்பீட்டுத் திட்டம், விதவை உதவித் தொகை, முதியோா் உதவித் தொகை, உழவா் பாதுகாப்புத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளா் நல வாரிய அட்டை, இலவச நில பட்டா, மாற்றுத் திறனாளிகளுக்கான அட்டை மற்றும் தமிழ்நாடு அரசின் தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வலைதளத்தில் பதிவு செய்தல் மற்றும் நலத் திட்ட உதவிகள் பெற முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது.
எனவே, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவா்கள், தங்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வரும் நம்பிக்கை மையங்களில் பணிபுரியும் ஆலோசகா்கள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஏஆா்டி மையம் ஆகியவற்றில் தங்களுக்கு தேவையான திட்டங்களுக்கு விண்ணப்பங்களையும், ஆதார சான்றிதழ்களையும் வழங்கி பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.