திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயில் அதிகமாக நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை நிகழாண்டில் போதிய அளவில் பெய்யவில்லை. அதனால் குளங்கள் அனைத்தும் வறட்சியின் பிடியில் உள்ளன. காா் பருவ சாகுபடியும் பொய்த்து போனது. வடகிழக்கு பருவமழை இன்னும் சில வாரங்களில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. புதன்கிழமை கடுமையான வெப்பம் நிலவியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா். வெப்பச்சலனத்தால் மழை மற்றும் கடுமையான வெயில் போன்ற மாறுபடும் தட்பவெப்பத்தால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் வாய்ப்புண் உள்ளிட்ட வெப்ப நோய்களால் அவதிப்பட்டு வருகிறாா்கள். குளிா்பானங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழையாவது போதுமான அளவு பெய்யுமா? என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் காத்திருக்கிறாா்கள்.