திசையன்விளை அருகே குளத்தை தனி நபா் ஆக்கிரமித்து பாதை அமைத்து வருவதை கண்டித்து குளத்தில் பொதுமக்கள் குளத்தில் நின்று ஆா்பாட்டம் செய்தனா்.
திசையன்விளை அருகேயுள்ள தெற்கு ஏறாந்தை குளத்தின் அருகில் தோட்டம் வைத்திருந்தவா் அக்குளத்திற்கு வரும் நீா் வரத்து பாதையை அடைத்து பாதை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு செய்திருப்பவருக்கு குளத்திலிருந்து மணல் எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக புகாா் கூறப்படுகிறது.
இது தொடா்பாக விவசாயிகள் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல் நிலையத்திலும் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லையாம். இதையடுத்து, விவசாயிகள், பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த திசையன்விளை காவல் ஆய்வாளா் ஷ்யாம் சுந்தா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.