திருநெல்வேலி கண்டிகைப்பேரி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராமையன்பட்டியில் இருந்து கண்டிகைப்பேரி வழியாக பழையபேட்டைக்கு சாலை உள்ளது. திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் கூட்டுக் குடிநீா்த் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி-தென்காசி மாா்க்கத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் இந்தச் சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளன.
கண்டிகைப்பேரிகுளம், இலந்தைகுளம் உள்ளிட்டவற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள இச் சாலையில் பல இடங்களில் குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். பருவமழை தொடங்கும் முன்பாக இந்தச் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.