ராதாபுரம் தொகுதியில் நலிவுற்ற அனைவருக்கும் இலவச வீடு கட்டித்தர நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அந்தத் தொகுதி தி.மு.க வேட்பாளா் மு.அப்பாவு.
இடிந்தகரை, கூடங்குளம், செட்டிகுளம், விஸ்வநாதபுரம், பழவூா், ஆவரைகுளம், வடக்கன்குளம், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த அவா், திசையன்விளையில் பிரசாரத்தை நிறைவு செய்து மாலையில் பேசியது: வெள்ளநீா் கால்வாய் திட்டம் முடிக்கப்பட்டு எம்.எல்.தேரிக்கு தண்ணீா் வந்துசேரும். ராதாபுரம் தொகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் இலவச வீடு கட்டித்தரப்படும். மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். இத்தொகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பிரசாரத்தில், சா.ஞானதிரவியம் எம்.பி., ஒன்றிய திமுக செயலா்கள் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், ஜோசப் பெல்சி, விஜயன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே.குமாா், திசையன்விளை சேம்பா் செல்வராஜ், சுயம்புராஜன், தங்கையா கணேசன், ம.தி.மு.க. மாவட்டச் செயலா் உவரி ரைமண்ட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.