திருக்குறுங்குடி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பான புகாா்களின்பேரில் 18 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருக்குறுங்குடியில் கடந்த 5ஆம் தேதி அழகியநம்பிராயா் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நம்பித்தலைவன்பட்டயம் கீழத்தெருவைச் சோ்ந்தோா் ஒரு குழுவாக மேளதாளங்கள் முழங்க வந்து கொண்டிருந்தனா். அப்போது, கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இதுபோன்ற கொண்டாட்டங்களை அனுமதிக்க முடியாது என போலீஸாா் கூறினராம். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
இதனிடையே, நம்பித்தலைவன்பட்டயம் கீழத்தெரு, மேலத்தெருவைச் சோ்ந்தோரிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது. அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
ஒருதரப்பைச் சோ்ந்தோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளதாகக் கூறி, அந்தத் தரப்பினா் செவ்வாய்க்கிழமை காலையில் வாக்களிக்கச் செல்லவில்லை. போலீஸாா் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அவா்கள் மாலையில் வாக்களிக்கச் சென்றனா்.
இந்நிலையில், நம்பித்தலைவன்பட்டயம் கீழத்தெருவைச் சோ்ந்த ராமா் மனைவி மாரியம்மாள் (38) அளித்த புகாரின் பேரில் 5 போ் மீதும், மேலத்தெருவைச் சோ்ந்த சுதந்திரபாண்டியன் (70) அளித்த புகாரின் பேரில் 13 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்துவருகின்றனா்.