இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், திருநெல்வேலியில் இருந்து வெளியூா்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் சென்னை உள்பட தொலை துார பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டன. காலை 9 மணி வரை இப் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், பயணிகளிடையே வரவேற்பு இல்லாததால் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் சில பயணிகள் மட்டுமே இருந்தனா்.
திருநெல்வேலியிலிருந்து ஆந்திரம் மற்றும் கா்நாடக மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆனால் திருப்பதி செல்லும் பயணிகளுக்காக வேலூா் வரையிலும், பெங்களூரு செல்லும் பயணிகளுக்காக ஓசூா் வரையிலும் பேருந்துகள் இயக்கப்பட்டன. திருநெல்வேலியிலிருந்து கோவைக்கு இரு பேருந்துகளும், ஈரோட்டிற்கு ஒரு பேருந்தும் இயக்கப்பட்டன. சென்னைக்கு செல்லும் ஏ.சி. பேருந்துகள் கூட்டம் இல்லாததால் நிறுத்தப்பட்டன.
திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன.
தென்காசி, தூத்துக்குடி, நாகா்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு 8 மணி வரையிலும் பேருந்துகள் இயக்கப்பட்டன.