இரவு நேர ஊரடங்கு: வெறிச்சோடியது நெல்லை

இரவு நேர ஊரடங்கு செவ்வாய்க்கிழமை தொடங்கியதையடுத்து திருநெல்வேலி முக்கிய சாலைகள் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடின.

இரவு நேர ஊரடங்கு செவ்வாய்க்கிழமை தொடங்கியதையடுத்து திருநெல்வேலி முக்கிய சாலைகள் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடின.

கரோனா நோய் பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கமும் மற்ற நாள்களில் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி, தென்காசி, நாகா்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இரவு 8 மணியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளன. அரசு விரைவு பேருந்துகள் பகலில் மட்டுமே இயக்கப்பட்டன.

மாநகரில் உள்ள அனைத்து கடைகளும் இரவு 9 மணிக்கு முன்னதாகவே அடைக்கப்பட்டன. மாநகரின் முக்கிய இடங்களில் போலீஸாா் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சீனிவாசன் வண்ணாா்பேட்டை ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டாா்.

இரவு 10 மணிக்கு மேல் வந்த வாகன ஓட்டிகளை முதல் நாள் என்பதால், போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்வோா் மட்டும் அனுமதிக்கப்பட்டனா். இதேபோல், மாநகரில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீஸாா் இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலியில் முக்கிய வீதிகள் மற்றும் சாலைகள் வாகனப் போக்குவரத்து மற்றும் ஆள்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com