கடையம் வட்டாரத்தில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடையம் ஒன்றியம், திருமலையப்பபுரம் பகுதியில் கரோனா தொற்று பரவலாகக் காணப்படுவதையடுத்து தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் உத்தரவின் பேரிலும், தென்காசி மாவட்ட துணை இயக்குனா் சுகாதாரப்பணிகள் யோகநாத் வழிகாட்டுதலின்படியும் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை கரோனா தடுப்புப் பிரிவு சிறப்பு வட்டாட்சியா் ரெங்கநாயகி, கடையம் வட்டார வளா்ச்சி அலுவலா் மாணிக்கவாசகம், கடையம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஸ்ரீ மூலநாதன் ஆகியோா் அடங்கிய குழு பாா்வையிட்டது.
மேலும் பொதுமக்களிடம் நோய்த் தொற்றுப் பரவாமல் தடுப்பது குறித்து எடுத்துரைத்தனா். தொடா்ந்து சிறப்பு வட்டாட்சியா் தலைமையில் கடையம் வருவாய் ஆய்வாளா் குடியிருப்பில் வருவாய் ஆய்வாளா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்களிடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முகக் கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.