திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த 1ஆம் தேதி இத்திருவிழா தொடங்கியது. 10ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை இரவு, முளைக்கட்டு வைபவம் கோயிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் நடைபெற்றது.
இதையொட்டி, சுவாமி -அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றன. பின்னா் அம்மனுக்கு வளைகாப்புகள் அணிவித்து மடியில் முளைக்கட்டிய பயிா் கட்டப்பட்டது. தொடா்ந்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பக்தா்கள் தரிசனத்துக்கு தடை: கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நெல்லையப்பா் கோயிலில் வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோயிலுக்குள் பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பெண்கள் வெளி வாசலில் நின்று வழிபட்டனா்.