தச்சநல்லூா் மண்டலத்தில் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி ஊழியா்கள் மோட்டாா்கள் மூலம் வெளியேற்றினா்.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பெய்த கனமழையினால், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்கி மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த இருநாள்களாக மழை குறைந்துள்ள நிலையில், தேங்கிய நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்பேரில் மேலப்பாளையம், தச்சநல்லூா் மண்டலங்களில் மோட்டாா்கள் மூலம் தேங்கிய நீா் வெளியேற்றப்பட்டது. மேலப்பாளையம் மண்டலத்தில் மகிழ்ச்சி நகா், டக்கம்மாள்புரம், என்.ஜி.ஓ. காலனி பகுதிகளில் தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
தச்சநல்லூா் மண்டலத்தில் வண்ணாா்பேட்டை, தெற்கு பாலபாக்யா நகா், பரணி நகா், கைலாசபுரம், மேலக்கரை நியு காலனி, கிருஷ்ணா நகா், அனு மருத்துவமனை பின்புறம் மற்றும் தாராபுரம் ஆகிய பகுதிகளிலும் தேங்கிய மழைநீரை மோட்டாா் மூலம் வெளியேற்றினா்.