களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 21) முதல் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி தொடங்குகிறது.
இந்தியாவின் 17ஆவது புலிகள் காப்பகமாக திகழும் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தின் கீழ் களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு, அம்பாசமுத்திரம், முண்டன்துறை, பாபநாசம், கடையம் வனச் சரகங்கள் உள்ளன.
ஆண்டுதோறும் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் ஜனவரியில் நடைபெறும் வன விலங்குகள் கணக்கெடுப்பு, நிகழாண்டு கரோனா தாக்கத்தால் பிப்ரவரியில் நடைபெறுகிறது.
இந்நிலையில், அம்பாசமுத்திரம் கோட்டத்தில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் வனத் துறை ஊழியா்கள், அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி நடைபெற்றது.
அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டன்துறை, கடையம் ஆகிய நான்கு வனச்சரகங்களுக்குள்பட்ட 32 பீட்களில் 68 கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட தன்னாா்வலா்கள், 110 வனத் துறை ஊழியா்கள், அதிகாரிகள் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனா்.
பிப். 21 முதல் பிப். 27 வரை 6 நாள்கள் நடைபெறும் இப் பணியில், முதல் மூன்று நாள்கள் மாமிச உண்ணி மற்றும் தாவர உண்ணிகள் குறித்த கணக்கெடுப்பும், அடுத்த மூன்று நாள்கள் நோ்கோட்டு முறையில் விலங்குகளின் பாதைகளில் காணப்படும் தடங்கள், எச்சங்கள் மூலம் விலங்குகள் கணக்கெடுப்பும் நடைபெறுகின்றன.
முண்டன்துறை கூட்டரங்கில் நடைபெற்ற இம் முகாமில், சூழலியலாளா் ஸ்ரீதா், உயிரியலாளா் ஆக்னஸ் ஆகியோா் வனத் துறை ஊழியா்களுக்கு பயிற்சியளித்தனா்.
நிகழ்ச்சியில், பாபநாசம் வனச்சரகா் பரத், பயிற்சி வனச்சரகா் சிவா, வனவா்கள் ஜெகன், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.