திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் லெனின் தலைமையிலான குழுவினா் ஆய்வுப் பணி மேற்கொண்டனா். இதில், பயணிகள் தங்கும் அறைகள், ஓய்வெடுக்கும் பகுதி, ரயில் நிலையத்தின் உள்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடைபெற்றது. அப்போது அவா் செய்தியாளா்களிடம் பேசியது:
வருடாந்திர ஆய்வுப் பணிக்காக திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கரோனா பொதுமுடக்க தளா்வையடுத்து, தற்போது பயணிகள் ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.
மதுரை - திருமங்கலம் இடையேயான இரட்டை ரயில் பாதை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இப்பணி மாா்ச் மாதத்துக்குள் நிறைவடையும்.
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து பாலக்காடு வரை செல்லும் விரைவு ரயில் பாவூா்சத்திரம், செங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.