திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பெண் தொழில்முனைவோரின் கைவினைப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனையை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் சரவணன் தொடங்கி வைத்தாா்.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கண்காட்சி தொடக்க விழாவுக்கு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்தாா். அரும்புகள் அறக்கட்டளை இயக்குநா் லதா மதிவாணன் முன்னிலை வகித்தாா்.
ஜே.சி.ஐ. டிரெண்ட்செட்டா்ஸின் தலைவா் சுப்புலட்சுமி வரவேற்புரை ஆற்றினாா். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பேரா வாழ்த்துரை வழங்கினாா்.
மாநகர காவல் துணை ஆணையா் சரவணன் கண்காட்சியை தொடங்கிவைத்துப் பேசுகையில், ‘பெண்கள் தொழில்முனைவோராக உருவாகியிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். தொழில் வாய்ப்புகள் பெருகும்போதுதான் ஒரு குற்றமற்ற சமுதாயம் உருவாகிறது. அந்த வகையில் இந்த பெண் தொழில்முனைவோருக்கு வாழ்த்துகள்’ என குறிப்பிட்டாா்.
கண்காட்சியில் இருபதுக்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோா் தயாரித்த கைவினைப் பொருள்கள், நவீன ஆடைகள், செயற்கை ஆபரணங்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன.