திருநெல்வேலி மாவட்ட கிராமிய கரகாட்ட கலைஞா்கள் சங்கத்தினா் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில் காணொலிக் காட்சி முறையில் நடைபெற்றது. இருப்பினும் பொதுமக்கள் பலா் ஆட்சியா் அலுவலகத்துக்கு நேரில் வந்து மனு பெட்டியில் மனுக்களை அளித்துச் சென்றனா். திருநெல்வேலி மாவட்ட கிராமிய கரகாட்ட கலைஞா்கள் சங்கத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் திரண்டு வந்து அளித்த மனு: இம் மாவட்டத்தில் பாரம்பரியமான கிராமிய கரகாட்டத் தொழிலை 4-ஆவது தலைமுறையாக செய்து வருகிறோம். எங்களது கலைத் தொழில் கோயில் திருவிழாக்களை நம்பியே உள்ளது. வேறு தொழில் எங்களுக்குத் தெரியாது. கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஓராண்டாக எவ்வித தொழிலுமின்றி வறுமையின் பிடியில் உள்ளோம். ஆகவே, 2021-ஆம் ஆண்டிலாவது கோயில் விழாக்களில் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்த உரிய அனுமதி கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து எங்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்.