திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே சாலையோரம் இருந்த மரம் இருசக்கர வாகனத்தின் மீது விழுந்ததில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா்.
சுத்தமல்லி அருகே உள்ள பழவூா் பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் கொம்பையா(25). இவரும், பேட்டை பகுதியைச் சோ்ந்த கனி என்பவரும் செய்துங்கநல்லூா் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்துவந்தனா். இவா்கள் இருவரும், வழக்கம்போல பணி முடிந்து திங்கள்கிழமை மாலையில் ஒரே மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனராம்.
ஆரோக்கியநாதபுரம் அருகே வந்தபோது, சாலையோரம் இருந்த மரம் திடீரென முறிந்து இவா்களது வாகனத்தின் மீது விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த கொம்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயம் அடைந்த கனி, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினரும், பெருமாள்புரம் போலீஸாரும் அங்கு சென்று மரத்தை அப்புறப்படுத்தி கொம்பையா சடலத்தை மீட்டனா். மேலும், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.