திருநெல்வேலியில் தொடா்மழையால் சாலைகள் குண்டும்-குழியுமாக மாறியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
திருநெல்வேலி மாநகர பகுதியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் குடிநீா்க் குழாய் பதிக்கும் திட்டம், புதை சாக்கடை திட்டம் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. இதற்காக பேட்டை, திருநெல்வேலி நகரம், திருநெல்வேலி சந்திப்பு, தச்சநல்லூா் பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டதால் சாலை சேதமானது.
இதேபோல திருநெல்வேலி நகரத்தின் மிகவும் பிரதான சாலையான சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட நிலையில் கடந்த பல மாதங்களாக சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள்.
சமாதானபுரம் ரவுண்டானாவில் இருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வரை செல்லும் சாலை குண்டும்-குழியுமாக காட்சியளிக்கிறது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகிறாா்கள்.
வழுக்கோடை பகுதி, திருநெல்வேலி சந்திப்பு தற்காலிக பேருந்து நிறுத்த பகுதிகளிலும் மிகவும் மோசமாக உள்ளன. மாநகரப் பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.