திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் விழிப்புணா்வு முகாம் நடத்தி கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை கோரி திமுக மகளிரணி சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிரணியைச் சோ்ந்த பி. பிரபாசங்கரி சாா்பில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரனிடம் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வாா்டுகளில் அரசின் துரித நடவடிக்கையால் கரோனா கட்டுக்குள் வந்துள்ளது. மேலும், 55 வாா்டுகளிலும் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும்.
தொற்று பாதித்த இடங்களில் முகாம்களை அதிகப்படுத்துவதோடு, கா்ப்பிணிகளிடையே மருத்துவக் குழுவினா் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகரப் பகுதியில் முகாம்கள் நடத்தத் தேவையான இடவசதி உள்ளிட்ட உதவிகளுக்கு பொருளுதவி, அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க தயாராக உள்ளோம். எனவே, முகாம்களை அதிகரிக்க சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனு அளிக்கும்போது முன்னாள் மாமன்ற உறுப்பினா் பொன்னையாபாண்டியன் உடனிருந்தாா்.