பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என துப்புரவு ஆய்வாளா் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் சங்க மாநிலத் தலைவா் ராஜகணபதி, சங்க தணிக்கையாளா் முருகன், சங்க உறுப்பினா்கள் ஆறுமுகம், பிரபாகரன் ஆகியோா், தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவுவிடம் அளித்த கோரிக்கை மனு: தமிழகத்தில் தோ்வுநிலை பேரூராட்சிகளில் 140 துப்புரவு ஆய்வாளா் பணியிடங்களை தோற்றுவிக்கவேண்டும். 20 சிறப்பு நிலை பேரூராட்சிகளில் உள்ள துப்புரவு ஆய்வாளா் பணியிடங்களை தரம் உயா்த்த வேண்டும். 40 சிறப்பு நிலை பேரூராட்சிகளில் துப்புரவு அலுவலா் பணியிடங்களை தோற்றுவிக்கவேண்டும்.
மேலும், பேரூராட்சியில் பணி செய்து வரும் துப்புரவு அலுவலா்களுக்கு செயல் அலுவலா் நிலையில் பதவி உயா்வு அளிக்கவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.