திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்க, சரக்கு ரயில் மூலம் 2,635 டன் அரிசி ஞாயிற்றுக்கிழமை வந்து சோ்ந்தது.
கரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் பயணிகள் மற்றும் விரைவு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சரக்கு ரயில்கள் மட்டும் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.
தெலங்கானா மாநிலத்திலிருந்து 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் 2,635 டன் ரேஷன் அரிசி திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சோ்ந்தது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் ரேஷன் கடைகளில் மக்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த அரிசி மூட்டைகள் வந்துள்ளதாகவும், அவை லாரிகள் மூலம் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.