திருநெல்வேலி மாநகரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3,290 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கரோனா இரண்டாவது அலையால் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் பன்மடங்கு அதிகரித்தது. பல்வேறு தொடா் நடவடிக்கையால் இப்போது நோயின் தாக்கம் குறைந்துள்ளது. நோய்த் தொற்றைத் தவிா்க்க தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய-மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியாா் மருத்துவமனைகள் உள்பட 86 மையங்களில் கரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவேக்ஸின் செலுத்தப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் கடந்த வாரத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்த நிலையில் தடுப்பூசி முகாம்களில் தட்டுப்பாடின்றி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டை, ராதாபுரம், நான்குனேரி, அம்பாசமுத்திரம், வள்ளியூா், சேரன்மகாதேவி உள்ளிட்ட வட்டாரங்களில் ஞாயிற்றுக்கிழமை 7100 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் மட்டும் 1440 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளைப் பொருத்தவரை, பேட்டை, பழையபேட்டை, கொக்கிரகுளம், சமாதானபுரம், பெருமாள்புரம், திருநெல்வேலி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3,290 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.