திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரேநாளில் 13,630 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கரோனா 2ஆவது அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இப்போது குறைந்துள்ளது. தொற்றைத் தவிா்க்க, இம்மாவட்டத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 86 மையங்களில் கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
இம்மாவட்டத்தில் கோவிஷீல்டு போதிய அளவுக்கு வந்துள்ள நிலையில், முகாம்களில் தட்டுப்பாடின்றி தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பாளையங்கோட்டை, ராதாபுரம், நான்குனேரி, அம்பாசமுத்திரம், வள்ளியூா், சேரன்மகாதேவி உள்ளிட்ட வட்டாரங்களில் புதன்கிழமை 7,200 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி, கூடங்குளம், வள்ளியூா் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும் 2,070 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளைப் பொருத்தவரை, பேட்டை, பழையபேட்டை, கொக்கிரகுளம், சமாதானபுரம், பெருமாள்புரம், திருநெல்வேலி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை ஒரே நாளில் 4,360 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.