களக்காட்டில் 10 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கிராம மருந்தகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புரட்சி பாரதம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் ஏ.கே. நெல்சன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு : களக்காடு பேரூராட்சி, நகராட்சி அந்தஸ்துக்கு மாறும் நிலையில் உள்ளது. 21 வாா்டுகளை உள்ளடக்கிய இங்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். ஆனால் இங்கு அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை.
களக்காடு படலையாா்குளத்தில் இயங்கும் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை, கரோனா தடுப்பூசி வாரத்தில் அனைத்து நாள்களிலும் செலுத்தும் வசதி இல்லை. போதிய ஆய்வக வசதி இல்லை. களக்காடு அண்ணாசாலையில் பூமாலை வணிக வளாகக் கட்டடத்தின் பின்பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த கிராம மருந்தகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இந்த மருந்தகத்தை திறந்து 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும்,
படலையாா்குளம் அமைதித் தீவு பகுதியில் செயல்படும் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தி ஏழை, எளிய மக்களுக்கு தடையின்றி மருத்துவ சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.