முண்டந்துறை வனப் பகுதியில் மலையிலிருந்து தவறி விழுந்து யானை உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், முண்டந்துறை வனப் பகுதியில் மலையிலிருந்து தவறி விழுந்து பெண் யானை உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், முண்டந்துறை வனச்சரகத்துக்குள்பட்ட கன்னிகட்டி வனப்பகுதியில் சுமாா் 20 வயது மதிக்கதக்க பெண் யானை மலையிலிருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததையடுத்து செவ்வாய்க்கிழமை மாவட்ட வன உயிரினக் காப்பாளா் மற்றும் புலிகள் காப்பக துணை இயக்குநா் (பொ) கெளதம் தலைமையில் வனச்சரகா் சரவணக்குமாா், மாவட்ட வன கால்நடை மருத்துவா் மனோகரன், திருநெல்வேலி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பேராசிரியா் முத்துகிருஷ்ணன், கால்நடை மருத்துவா் சிவமுத்து, வன உயிரியலாளா் ஸ்ரீதா், வன கால்நடை ஆய்வாளா் அா்னால்ட், வனவா் ஜெகன் மற்றும் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்து சம்பவ இடத்திலேயே யானையை பிரேதப் பரிசோதனை செய்தனா்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அண்மைகாலமாக பல்வேறு காரணங்களால் யானைகள் உயிரிழந்து வரும் நிலையில் முண்டந்துறை வனப்பகுதியில் மலையிலிருந்து தவறி விழுந்து 20 வயது பெண் யானை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.