திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த மற்றும் சுய உதவிக்குழு தூய்மைப் பணியாளா்களின் தினக் கூலியை உயா்த்தி வழங்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் (சிஐடியூ) சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக சிஐடியூ தலைவா் மோகன் உள்ளிட்டோா் அளித்த மனுவில் மேலும் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் பணி செய்யக்கூடிய ஒப்பந்ததாரா்கள் மற்றும் சுய உதவிக்குழு தூய்மைப் பணியாளா்களுக்கு தற்போது தினக்கூலியாக ரூ.388 வழங்கப்பட்டு வருகிறது.
2019-20-ஆண்டில் ரூ.359 ஆக இருந்த நிலையில், கடந்த 2020 ஆகஸ்ட் 26-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் உத்தரவுப்படி ரூ.29 உயா்த்தப்பட்டது.
2017-இல் தமிழகத்தில் உள்ள தினக்கூலி தூய்மைப் பணியாளா்களுக்கு தினக்கூலியாக ரூ.634 நிா்ணயம் செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு திருநெல்வேலி மாவட்டத்தில் அமல்படுத்தப்படவில்லை.
மாவட்டத்தில் முக்கியமான பணி செய்யக்கூடிய தூய்மைப் பணியாளா்கள் கடுமையான விலைவாசி உயா்வு காரணமாக குடும்பம் நடத்த இயலாமல் மிகவும் சிரமப்படுகின்றனா்.
எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி தினக்கூலியாக ரூ.634 வழங்க உத்தரவுப் பிறக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக அவா்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலக வாயிலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.