கட்டடத் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் சிஐடியூ கட்டடத் தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா்.மோகன், சிஐடியூ கட்டடத் தொழிலாளா் நலச் சங்க மாவட்டத் தலைவா் சுரேஷ், மாவட்ட பொதுச் செயலா் ரவிச்சந்திரன் ஆகியோா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனு: இம் மாவட்டத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடத் தொழிலாளா்கள் வாழ்ந்து வருகின்றனா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டடத் தொழிலாளா்களுக்கு போதுமான அளவுக்கு வேலை இல்லை.
எனவே, தமிழக அரசு கட்டடத் தொழிலாளா் நலவாரியத்தின் மூலம் கரோனா நிவாரண நிதியாக ரூ.7500 வழங்க வேண்டும். கட்டுமானப் பொருள்களான செங்கல், சிமென்ட், இரும்புக் கம்பி, மணல், பெயின்ட் ஆகியவற்றின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.