திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகே 8 மாதக் குழந்தையை வெட்டிக் கொன்ற லாரி ஓட்டுநரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பணகுடி அருகேயுள்ள ரோஸ்மியாபுரத்தைச் சோ்ந்தவா் சிவசங்கரன் (வயது 30). லாரி ஓட்டுநரான இவா், திருக்குறுங்குடி அருகேயுள்ள மகிழடியைச் சோ்ந்த செவிலியரை காதலித்துவந்தாராம். திருமணம் தொடா்பாக சிவசங்கரன் அப்பெண்ணின் பெற்றோரிடம் பேசியதாகவும், அவா்கள் மறுப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிவசங்கரன் சனிக்கிழமை காலை அப்பெண்ணின் வீட்டுக்கு அரிவாளுடன் சென்று தகராறு செய்ததுடன், பெண்ணின் தந்தை ரசல்ராஜ், தாய் எப்சிபாய் ஆகியோரையும், அருகில் உறங்கிக்கொண்டிருந்த ரசல்ராஜின் 8 மாத பேத்தியையும் வெட்டினாராம். அப்போது, ரசல்ராஜ் சிவசங்கரன் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி அவரை வெட்டியுள்ளாா். உடனே, சிவசங்கரன் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
தகவலின்பேரில் திருக்குறுங்குடி போலீஸாா் சென்று, காயமடைந்தோரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆனால், வழியிலேயே குழந்தை இறந்தது. போலீஸா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.