கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் முழு பொதுமுடக்கம் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டதால், முக்கிய வீதிகள், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கரோனா பரவலின் இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்கும் வகையில் வார நாள்களில் இரவு நேர பொதுமுடக்கமும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கமும் தமிழக அரசு அமல்படுத்தியது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட முழு பொதுமுடக்கத்தில், பேருந்து போக்குவரத்து, ஆட்டோ போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் தடை செய்யப்பட்டன. பால், மருந்து கடைகள் மட்டும் இயங்கின. உணவகங்களில் காலை, மாலை, இரவு குறிப்பிட்ட நேரங்களில் பாா்சல் மட்டும் அனுமதிக்கப்பட்டன.
அதேபோன்று, மின் வணிக நிறுவனங்களான உணவு வழங்கும் நிறுவனங்கள் மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் செயல்பட்டன. இதனால், மாநகரின் முக்கிய வீதிகள், சாலைகளில் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டன. கிறிஸ்தவ ஆலயங்களில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெறவில்லை. நெல்லையப்பா் கோயில், குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. பேருந்து நிலையங்கள், முக்கிய சந்திப்புகள் ஆகியவற்றில் மாநகராட்சி ஊழியா்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.அதையடுத்து அவ்வழியாக அவசர தேவைக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. மாநகரில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். தேவையில்லாமல் வெளியில் சுற்றியவா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா்.