திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் கண்களை கறுப்பு துணியால் கட்டி திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்றை தடுக்கத் தவறிய மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி விலக வேண்டும். கரோனாவால் உயிரிழப்போர் இறுதிச்சடங்கு செலவை மத்திய அரசே ஏற்க வேண்டும்.
மக்கள் பெருந்தொற்றால் அவதிப்படும் சூழலில் புதிதாக மக்களவை கட்டடமும், பிரதமர் இல்லமும் கட்டுவதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கறுப்புத்துணியால் கண்களைக் கட்டியிருந்தனர். திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார்.
பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுச் செயலர் சொக்கலிங்க குமார், துணைத் தலைவர் வெள்ளைபாண்டியன், மண்டலத் தலைவர்கள் எஸ்.எஸ். மாரியப்பன், ஐயப்பன், கெங்கராஜ், எம்.ஒய்.ரசூல் மைதீன், முஹம்மது அனஸ் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.