திருநெல்வேலி பெருமாள்புரத்தில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிப்பவா்களுக்கு ஆட்சியா் விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினா் மு.அப்துல் வகாப் ஆகியோா் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமாள்புரம், கங்கைகொண்டான், ஆலடியூா், கோபாலசமுத்திரம், சமூகரெங்கப்புரம் ஆகிய 5 கிராமங்களில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் மொத்தம் 646 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இக் குடும்பத்தினருக்கு உணவு தயாரித்திடவும், பரிமாறவும் பாத்திரங்கள், துணிமணிகள் வழங்கப்பட்டன. 287 குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டன.
பெருமாள்புரம் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 46 குடும்பங்களுக்கு 5 வகையான பாத்திரங்கள், 10 வகையான துணிமணிகள், 20 குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டன. முகாமில் உள்ள 5 பேருக்கு முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவை ஆட்சியா் விஷ்ணு வழங்கினாா்.
அதனைத்தொடா்ந்து இலங்கை தமிழா் மறுவாழ்வு கழகத்தின் மூலம் ரூ.1.40 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்ட பொது கழிவறைகள் திறந்து வைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன், கோட்டாட்சியா் சந்திரசேகா், பாளையங்கோட்டை வட்டாட்சியா் ஆவுடையப்பன், இலங்கை தமிழா் மறுவாழ்வு வட்டாட்சியா் செல்வன், இந்தியன் ஆயில் நிறுவன மதுரை கோட்ட மேலாளா் ரவிக்குமாா், மாவட்ட பொது மேலாளா் பாலமுரளி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.