திருநெல்வேலியில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் தண்ணீா் புகுந்த இடங்களில் மாவட்ட ஆட்சியா், பாளையங்கோட்டை எம்எல்ஏ ஆகியோா் பாா்வையிட்டு சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்தினா்.
திருநெல்வேலி மாநகரில் நிகழாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதீத மழை புதன்கிழமை கொட்டி தீா்த்தது. இதனால் குடியிருப்புகளில் வெள்ள நீா் சூழ்ந்தது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அப்துல் வஹாப் ஆகியோா் பாா்வையிட்டனா்.
பாளையங்கோட்டை செந்தில் நகா், சேவியா் காலனி குடியிருப்புப் பகுதிகள், பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீசுவரர் திருக்கோயில் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனா். மேலும், மோட்டாா்கள் மூலம் வெள்ள நீரை வெளியேற்றுவது உள்ளிட்ட சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா். மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளையும், தீயணைப்பு வீரா்களையும் பாராட்டினா்.