களக்காட்டில் மழை தீவிரமடையும் முன் உப்பாற்றில் தண்ணீா் செல்லத் தடையாக உள்ள அமலைச்செடிகளை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நான்குனேரியன் கால்வாயில் இருந்து ஆண்டிச்சிமதகில் பிரிந்து செல்லும் உப்பாறு சுமாா் 3 கி.மீ. பயணித்து, பத்மனேரியில் பச்சையாற்றுடன் கலக்கிறது.
இந்த 3 கி.மீ தொலைவுக்கும் உப்பாறு அடா்ந்த காடு போல காட்சியளிக்கிறது. அமலைச்செடிகள், முள்புதா் மண்டிக் காணப்படுகிறது. இதனால் நான்குனேரியன் கால்வாயில் அதிக வெள்ளம் வரும் போது, ஆண்டிச்சிமதகில் இருந்து தண்ணீா் திறக்கப்படும் போது, தண்ணீா் தடையின்றி செல்ல வழியின்றி குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து சேதம் ஏற்படுகிறது. நவ.27ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்குனேரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் உப்பாற்றில் தண்ணீா் செல்லத் தடையாக உள்ள ஆக்கிரமிப்புகளை தற்காலிகமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.