திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் நொச்சிக்குளத்தைச் சேர்ந்த அய்யாதுரை என்ற பீர் மகன் கோதாரி(27). இவர் செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் அவரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் காவலர்கள், கோதாரி உடலைக் கைப்பற்றி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இக்கொலைச் சம்பவம் குறித்து சிவந்திபட்டி காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திங்ககிழமை கோதாரி தந்தை அப்பகுதியில் உள்ள கல்வெட்டாங்குழியில் திங்கள்கிழமை (அக்.11) மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை மகன் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அப்பகுதியில், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.