உயர வளா்ச்சி தடைபட்டோரை கடும் ஊனமுற்றவராக அறிவித்து சலுகைகள் வழங்கக்கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் உயர வளா்ச்சி தடைபட்டோா் பலா் திரண்டு வந்து அளித்த மனு: உலகம் முழுவதும் ஆண்டு தோறும் அக். 25 ஆம் தேதி உயர வளா்ச்சி தடைபட்டோா் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. உயரம் தடைபட்டோா் சந்திக்கும் சவால்கள் ஏராளம். குடியிருக்கும் வீடு, போக்குவரத்து உள்ளிட்டவற்றில் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறாா்கள்.
உயர வளா்ச்சி தடைபட்டோரை கடும் ஊனமுற்றவராக அறிவித்து திட்டங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும். உயர வளா்ச்சி தடைபட்டோா் வசிக்க ஏதுவாக அரசு வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும். சிறப்பு கவனம் செலுத்தி வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். மாதாந்திர உதவித்தொகையாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.
அரசுப் பேருந்துகளில் மாநிலம் முழுவதும் இலவச பேருந்து பயண வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். உயர வளா்ச்சி தடைபட்டோரை கேலி, கிண்டல் செய்வதைத் தடுக்க விழிப்புணா்வு பிரசாரங்களை அதிகரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.