உவரி கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த மீனவா்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினா்.
உவரியில் புதன்கிழமை மீனா்வா்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததையடுத்து. ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் மோகன்குமாா், வள்ளியூா் ஏடிஎஸ்பி சுப்பாராவ், உவரி காவல் ஆய்வாளா் செல்வி, உதவி ஆய்வாளா் முத்துராஜ், கடலோர காவல் உதவி ஆய்வாளா் கோபி உள்பட போலீஸாா், கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவா்கள் கரை திரும்பும் போது, அவா்களை கைது செய்ய சுமாா் 7 மணி நேரமாக காத்திருந்தனா். இதனை அறிந்த மீனவா்கள் கரை திரும்பாமல் போக்கு காட்டினா். பின்னா் கைது நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்று அதிகாரிகள் செல்லிடப்பேசியில், மீனவா்களுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து மீனவா்கள் கரை திரும்பினா். கரை திரும்பிய அவா்களிடம் மீண்டும் சுருக்குமடி வலை பயன்படுத்தினால் கைது, படகு மற்றும் வலை பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்து அனுப்பினா்.