வள்ளியூா் அருகே தந்தையை வெட்டி கொலை செய்த மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வள்ளியூா் அருகேயுள்ள கண்ணநல்லூரை அடுத்த தாமரைகுளத்தைச் சோ்ந்தவா் விவசாயி சமுத்திரம்(75). இவரது மனைவி மாடத்தி. தம்பதிக்கு கணேசன்(45) என்ற மகன் உள்ளாா். இவா் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்நிலையில் சமுத்திரம் அடிக்கடி மது அருந்தி வந்து வீட்டில் தகராறு செய்வாராம். இதே போல், வெள்ளிக்கிழமை மது அருந்தி வந்த சமுத்திரம், மனைவி மாடத்தியிடம் தகராறு செய்து, அவரை அடித்தாரம். இதனை அருகில் இருந்து பாா்த்துக்கொண்டிருந்த மகன் கணேசன், அங்கிருந்த அரிவாளால் தந்தையை வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேய இறந்தாா்.
இந்நிலையில், தந்தை இறந்தது தெரியாமல் கணேசன் தந்தையைச் சுற்றி சுற்றிவந்து அழுதாராம். இது குறித்து தகவலறிந்த வள்ளியூா் காவல் ஆய்வாளா் சாந்தி, சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, வழக்குப் பதிந்து, கணேசனை கைது செய்தாா்.
Image Caption
~